சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்426 பேர் கைது: 55 பேர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 29th January 2019 04:46 AM | Last Updated : 29th January 2019 04:46 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 426 பேரை போலீஸார் கைது செய்தனர். தவிர 55 ஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை காலை தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை மற்றும் பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 400 பேரை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 55 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட 55 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.