தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க உதவிக் கோட்டப் பொறியாளருடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கடந்த மே 28 ஆம் தேதி சென்னை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. 41மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரியும், இறந்துபோன குடும்பங்களில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற 27 சாலைப் பணியாளர்களின் ஊதியத்தை திருச்செங்கோடு உதவிக் கோட்டப் பொறியாளர் பிடித்தம் செய்தார்.
இந்த நிலையில் திருச்செங்கோடு நிர்வாகத்தைக் கண்டித்து பிடித்தம் செய்த சம்பளத்தை சாலைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனை அறிந்த உதவிக் கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தையில் மே 28-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளத்தை முழுமையாக வழங்குவதாக ஒப்புக்கொண்டு உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் திருச்செங்கோடு உதவிக் கோட்டப் பொறியாளர் கேசவன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிசாமி, மாவட்டத் தலைவர் ரவி, வட்டத் தலைவர் பாஸ்கர், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.