நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் மரக்கிளைகளில் அமர்ந்து உணவருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாமக்கல் நகரில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், பல்வேறு தமிழறிஞர்களும், இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளும் பயின்றவர்கள் என்ற பெருமை உண்டு. தற்போது, இந்தப் பள்ளியில் 3 ஆயிரம் மாணவர்கள், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் மதிய இடைவேளையின்போது, கூடைப்பந்து மைதானம் அருகில் உள்ள வேப்ப மரக்கிளைகளில் ஏறி அமர்ந்தபடி உணவருந்துகின்றனர். எவ்வித பிடிமானமும் இல்லாமல் அவர்கள் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. அவ்வழியாகச் செல்லும் ஆசிரியர்களுக்கு தெரிந்தபோதும் அதைக் கண்டு கொள்ளவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. தினமும் நடைபெறும் இந்த செயலால் அப்பள்ளிக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள கல்வித் துறை அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உள்ளது. சாலையை ஒட்டியவாறு பள்ளி இருப்பதால் நாள்தோறும் பல்வேறு வேலை நிமித்தமாக மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். மாணவர்கள் சிலரின் தேவையற்ற செயல்களால் ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மரக்கிளைகளில் அமரும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை கூற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.