நாமக்கல்லில் ஜூலை 13-இல் (சனிக்கிழமை) மக்கள் நீதி மன்ற முகாம் நடைபெறுவதையொட்டி, பேருந்துகளில் விழிப்புணர்வு பிரசுரங்களை புதன்கிழமை ஒட்டினர்.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி, தமிழகத்தில் வரும் ஜூலை 13 -இல் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) முகாம் நடைபெறவுள்ளது. இதில், சாலை விபத்துகளில் இழப்பீடு, நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சாரம் பயன்பாடு, வீட்டுவரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள், செக்மோசடி, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், இந்த மக்கள் நீதி மன்றம், இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற பிரச்னைகளில் இருதரப்பினர் சம்மதத்துடன் தீர்வு காண வழிவகை செய்கிறது. இந்த நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக வாதாட விரும்பும் வழக்குரைஞர்கள், வரும் வெள்ளிக்கிழமைக்குள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் நீதிமன்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்துகளில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி டி.சுஜாதா விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறையினரும் பங்கேற்றனர்.