மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், மத்தியக் குழுவின் தலைவர் பி.என்.ரஞ்சித் குமார் ஆகியோர் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இப் பேரணி, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி மோகனூர் சாலை, உழவர் சந்தை, மணிக்கூண்டு வழியாக மீண்டும் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்று, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
மேலும், குடிநீரைச் சிக்கனமாய் பயன்படுத்துவோம், குழாய்களில் குடிநீர் வீணாவதைத் தவிர்ப்போம், சுத்தமே சுகாதாரம், மழைநீரே நீர் வளத்தின் ஆதாரம், மழைநீர் சேகரிப்பு ஒரு மகத்தான பணி, அதில் அனைவரும் பங்கேற்று பயன்பெறுவோம், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை அசுத்தம் செய்வதை தவிர்ப்போம், பாரம்பரிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவோம், நீர் மாசுபாடு, சுகாதாரத்திற்கு கேடு, மழை நீரைச் சேமித்து நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்ற வாசகங்களை முழக்கமிட்டபடி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மகளிர் திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.