நாமக்கல் மண்டலத்தில், கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த முட்டை விலை 20 காசுகள் சரிந்து, ரூ.4.45-ஆக வியாழக்கிழமை நிர்ணயிக்கப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல விலை நிர்ணயக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தேவை அதிகரிப்பு, தென்மேற்குப் பருவமழை, சத்துணவு முட்டை விநியோகம் போன்றவற்றால், கடந்த சில வாரங்களாக முட்டை விலை மற்றும் விற்பனை அதிகரித்தது. ஆனால், ஒரு வாரமாக பிற மண்டலங்களில் முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. விற்பனையும் பெருமளவில் அதிகரிக்காத சூழல் உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மற்ற மண்டலங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையை சற்று குறைக்கலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 20 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை மண்டலத்திலும் 20 காசுகள் சரிந்து ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): ஹைதராபாத்-429, விஜயவாடா-420, பார்வாலா-375, மைசூரு-460, ஹோஸ்பெட்-420, மும்பை-484, பெங்களூரு-455, கொல்கத்தா-451, தில்லி-395.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.65-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.72-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.