குமாரபாளையம் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாட்ஷா, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.கே.நாகராஜன் முன்னிலை வகித்தனர். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்தார்.
காவேரி நகர் மாரியம்மன் கோயில் மற்றும் மயானம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் ரூ.32 லட்சத்தில் படித்துறையுடன் கூடிய குளியல் அறை மற்றும் சிறு நடைபாலங்கள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் ரூ.67.20 லட்சம் மதிப்பில் 53 குப்பைகள் சேகரிக்கும் மின்சார வாகனம் மற்றும் இலகுரக வாகனம் வழங்கப்பட்டது. மேலும், சத்தியாபுரியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நான்கு வார்டுகளில் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்களும் திறக்கப்பட்டன. மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு கோட்டாட்சியர் பி.மணிராஜ், நகராட்சிப் பொறியாளர் எம்.குணசேகரன், அதிமுக முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, நிர்வாகிகள் சி.ரவி, ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.