பரமத்தி வேலூர் வட்டம்,கொந்தளம் காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருடப் பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.
கொந்தளம் காவிரி ஆற்றுப் பகுதியில் முறைகேடாக மணல் திருட்டு நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமி மேற்பார்வையில் பரமத்தி வேலூர் போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் கொந்தளம் காவிரி ஆற்றுக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கொந்தளம் காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக மணல் எடுப்பது தெரியவந்தது. போலீஸார் வருவதைப் பார்த்ததும் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 3 பேர் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.