நாமக்கல் மாவட்டத்தில் ரத்தக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14-இல் உலக ரத்தக் கொடையாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 14-ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் அது தொடர்பான விழிப்புணர்வு பேரணிகள், துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரத்தக் கொடையாளர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கல்லூரி, தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும், ஓராண்டில் மூன்று முறைக்கு மேல் ரத்த தானம் செய்த 40 தன்னார்வ ரத்த கொடையாளர்களுக்கும், 100 ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலை வகித்தார்.
ஆட்சியர் மு.ஆசியா மரியம் ரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், நாமக்கல் மாவட்டத்திலேயே அதிக முறை ரத்த தானம் செய்த எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தனது 18-வயதிலிருந்து இதுவரை 93 முறையும், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ அலுவலர் கண்ணன் 52 முறையும் ரத்த தானம் வழங்கியதை ஆட்சியர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் எம்.திருநாவுக்கரசு, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மருத்துவர் அன்புமலர், ரத்த வங்கி அலுவலர்கள் சிவக்குமார் (திருச்செங்கோடு), ஸ்ரீதேவி (ராசிபுரம்), தலைமை குழந்தைகள் மருத்துவ அலுவலர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.