குழந்தை விற்பனை சம்பவத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த லீலா, செல்வியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சாந்தியின் மனு 15-இல் விசாரணைக்கு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அமுதா உள்பட 8 பேரை கைது செய்தனர். சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பின், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுக் கலை நிபுணர் ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமுதாவின் சகோதரர் நந்தகுமார், திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ் வழக்கில், 11 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், செவிலிய உதவியாளரான சாந்தி, ஈரோட்டைச் சேர்ந்த கருமுட்டை இடைத்தரகர்களான லீலா, செல்வி ஆகியோர் ஜாமீன் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை நீதிபதி ஹெச்.இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி, லீலா, செல்வி ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்ததுடன், சாந்தியின் மனு மீதான விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.