நாமக்கல்லில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத் துறை சார்பில், 14 வயதிற்குள்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்குள்பட்ட வளர் இளம் சிறார்களைப் பணியில் அமர்த்துவதைத் தடை செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், புதன்கிழமை காலை விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமையில் அதிகாரிகள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியர் வலியுறுத்தினார். பின்னர், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பலர் தங்களது கையெழுத்தைப் பதிவு செய்தனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி, கல்லூரி மாணவ, மாணவியர் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
இப் பேரணியானது, நாமக்கல்-மோகனூர் சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சிலை, பரமத்தி சாலை மற்றும் சிலம்ப கவுண்டர் பூங்கா, தோரணவாயில் வழியாக நாமக்கல் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இதில், சார்- ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி மற்றும் சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.