பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பேருராட்சி நிர்வாகத்தினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 50 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனையடுத்து, பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகள், ,உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய 10 கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து நெகிழிப் பைகளை விற்பணை செய்பவர் மற்றும் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.