மோகனூர் வட்டம், அணியாபுரத்தில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், அணியாபுரம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஆட்சியரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 173 பயனாளிகளுக்கு ரூ.9.55 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கிப் பேசியது; மக்கள் தொடர்பு திட்ட முகாமின் முக்கிய நோக்கமானது, மக்களைத் தேடி அரசாங்கம் என்ற அடிப்படையில் கடைக்கோடி மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதாகும். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்கள், முறைசார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், சிறப்பு பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி ஆட்சியர் பாராட்டினார். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டு, உரிய அலுவலரிடம் வழங்கி மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந் நிகழ்ச்சியில், நாமக்கல் சார்- ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.விஜயலட்சுமி மோகனூர் வட்டாட்சியர் செல்வராஜ் உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.