நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.3.70-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இனி விலை குறைப்பில்லை என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதும், மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்து வருவதாலும், பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைவதாலும், விலையில் மாற்றம் செய்யலாம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.85-இல் இருந்து 15 காசு குறைக்கப்பட்டு, ரூ.3.70-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாள்களில் மட்டும் ஒரு ரூபாய் வீதம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் முட்டை விலை குறைக்கப்பட மாட்டாது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.செல்வராஜ் தெரிவித்தார்.
பிற மண்டலங்களான, சென்னையில் 395 காசுகளாகவும், ஹைதராபாத்-335, பெங்களூரு-375 காசுகளாகவும் முட்டை விலை உள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.55-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.73-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.