நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பேரணியை ஆட்சியர் மு.ஆசியா மரியம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட 250 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இப்பேரணியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். முன்னதாக பேரணி தொடக்க விழாவில் ஆட்சியர் பேசியது: 18 வயது தகுதியான வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு, இலவச தொடர்பு எண் 1950 ஐ தொடர்பு கொண்டு வாக்காளராகப் பதிவு செய்ய தேவையான தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதே விவரங்களை வாக்காளர் உதவி செயலியை கொண்டு எளிதில் தெரிந்துகொள்ளும் வசதியையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் வாக்காளர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமல், வரிசையில் நிற்காமல் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கணினி அல்லது செல்லிடப்பேசி உதவியுடன் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யவும் தனது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்ளவும் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து வாக்காளர்களும் தேர்தல் நாளன்று வாக்களிக்கவும், விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி, கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் பொதுமக்களை கவரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் தேர்தல் மின்னணு திரை வாகனம் மூலமாக தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை ஒளிபரப்பி தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
விழிப்புணர்வுப் பேரணியில், மகளிர் திட்ட இயக்குநர் மணி, ராசிபுரம் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பி.சந்திரா உள்பட அரசுத்துறை அலுவலர்கள், முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.