பரமத்தியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு மற்றும் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மு. ஆசியா மரியம் கலந்து கொண்டு ஊர்வலத்தைத் துவக்கி வைத்து, பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள்
வழங்கினார்.
பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் துவங்கிய வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் துவங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என முழக்கங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமத்தி வேலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேவிகா ராணி, மகளிர் திட்ட இயக்குநர் டாக்டர் மணி, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்மணி, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.