கோவா மாநில முதல்வர் மறைவையொட்டி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
கோவா மாநில முதல்வராக பதவி வகித்தவர் மனோகர் பாரிக்கர். பாஜகவைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவையொட்டி, நாடு முழுவதும் திங்கள்கிழமை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பறந்த தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தமிழகத்திலும் துக்கம் அனுசரிக்கப்பட்டதால், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.