அலங்காநத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதிக்கு தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், அலங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். தங்கள் பகுதியில், வாரம் ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அமைத்தபோதும் சரிவர தண்ணீர் விநியோகம் இல்லை.
இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியது உள்ளது. முதியோரும், குழந்தைகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அலங்காநத்தம் ஊராட்சிக்கு தடையின்றி குடிநீரும், இதர தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, மனு சேகரிக்கும் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை
செலுத்தினர்.