குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழிலாளர் தினம் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையம் காந்திநகரில் விசைத்தறித் தொழிலாளர் சங்கம் சார்பில் விசைத்தறித் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலர் எம்.சந்திரன் கொடியேற்றினார். சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓலப்பாளையம் கிளைச் செயலர் கே.எம் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வட்டமலை பஞ்சாலைத் தொழிலாளர் சங்க அலுவலகம், சங்ககிரி மேற்கு, கவுண்டனூர், சாமண்டூர், வெப்படை அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தனபால், மாவட்டத் துணைச் செயலர் ஏ.மாணிக்கம், பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத் துணைச் செயலர் பி.சண்முகம், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் செ.நல்லா கவுண்டர், நிர்வாகிகள் ஆர்.தேவராஜ், ஆர்.பாட்டாயி, எஸ்.தனசேகரன், பி.ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ராசிபுரத்தில்...
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ராசிபுரம் நகர, ஒன்றியக்குழு சார்பில் மே தின கொடியேற்று விழா மற்றும் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஆண்டகளூர்கேட் முதல் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் வரை மே தின இருசக்கர வாகனப் பேரணி நடந்தது. இதில் ராசிபுரம் நகரச் செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.ராஜா, நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் என்.செந்தில்குமார் ஆகியோர் பேரணியை தொடக்கி வைத்தார். முன்னதாக பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தம், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கட்சிக்கொடியேற்றி வைக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.குழந்தான் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.மணிவேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மே தினம் குறித்துப் பேசினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலச் செயலர் ஆர்.சரவணன், வெண்ணந்தூர் ஒன்றியச் செயலர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு நகரப் பகுதியில் புதன்கிழமை மே தின விழாவை பல்வேறு தொழிலாளர் சங்கத்தினர் கொண்டாடினர்.
திருச்செங்கோடு சேலம் சாலை, பட்டறை மேடு, அண்ணாசிலை, சந்தைப்பேட்டை, கூட்டப்பள்ளி, லாரி நிறுத்தம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை, தினசரி சந்தை போன்ற பகுதிகளில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் நலச் சங்கத்தினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மே தின விழாவையொட்டி கொடியேற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் புதிய சங்கத்தின் பெயர் பலகைகளை திறந்து வைத்து மே தின விழாவை கொண்டாடினர். பட்டறைமேடு பகுதியில் உள்ள லாரி கூண்டு கட்டும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் சார்பில் மே தின ஊர்வலம்
நடத்தப்பட்டது.
ஏராளமான தொழிலாளர்கள் மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.