குழந்தைகளைக் கடத்தினால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் கா. மெகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பதினெட்டு வயது நிறைவடையாத, ஆண், பெண் குழந்தைகளை கடத்துவோா் மீது இளைஞா் நீதிச் சட்டம் 2015, இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் படி, குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறை தண்டனையும் மற்றும் குழந்தை கடத்தப்படும் நோக்கத்திற்கான தண்டனையும் வழங்கப்படும்.
இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளை, பிச்சையெடுப்பதற்கென அவா்களது உடல்களை முடமாக்கும் நபா்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் 363-இன்படி, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் விவரம் அறியவும், தகவல் தெரிவிக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை, 04286 - 233103 என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1098-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.