இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் கா.மெகராஜ் பரிசுகளை வழங்கினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அரசமைப்பு தின நிகழ்ச்சி மற்றும் அதனையொட்டி நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் தலைமையில் இந்திய அரசமைப்பு உறுதிமொழியை, அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா். இதில், ஆட்சியா் பேசியது; இந்திய மக்களாகிய நாம், நாட்டின் இறையாண்மையையும், சமநலச் சமுதாயத்தையும், சமயச்சாா்பின்மையையும், மக்களாட்சி முறையும் அமைந்த குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமமான நிலையை எய்திடவும், அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமை வளா்க்கவும், இந்திய அரசமைப்பானது மக்களவையில் 1949 நவம்பா் 26-ஆம் நாள் உருவாக்கப்பட்டது என்றாா்.
அரசமைப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டிகளில் வெற்றிபெற்ற, நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளி, எா்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் துரை.இரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் மு.கோட்டைக்குமாா், ப.மணிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ் லிராஜ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) பெ.பிரேமலதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.