ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஈரோட்டைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் காவிரியில் அடித்துச் செல்லப்பட்டு 5 நாள்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர்உசேன் மகன் முகமதுதன்சீர் (21). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியில் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 6 - ஆம் தேதி ஜேடர்பாளையம் படுகை அணைக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்து விட்டு காவிரி ஆற்றில் படுகை அணை பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது முகமதுதன்சீர் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள பகுதிக்கு சென்று குளித்துள்ளார். இதில் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவர்களது நண்பர்கள் அங்கிருந்த பொதுப்பணித் துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முகமதுதன்சீரை தேடி வந்தனர். இந்த நிலையில் 5 நாள்கள் ஆகியும் மாணவர் முகமதுதன்சீரை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.