வட்ட அளவிலான தடகளப் போட்டிகளில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்ட அளவிலான தடகள மற்றும் குழுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குள்பட்டவர்களுக்கான தடகளப்போட்டியில் மாணவர் விமல்ராஜ் தட்டெறிதல் மற்றும் குண்டெறிதல் போட்டியிலும், பகத்சிங் உயரம் தாண்டுதல் போட்டியிலும், 17 வயதுக்குள்பட்டவர்களுக்கான பிரிவில் விஜித் 3000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ராகுலும் முதலிடத்தை பிடித்தனர்.
மாணவியர் பிரிவில் அபிதா மும்முறை தாண்டுதல், நந்திதா குண்டெறிதல், நவீனா நீளம் தாண்டுதல், கனிஷா தடைதாண்டுதல் ஓட்டம், 19 வயதுக்குள்பட்டவர்கள் பிரிவில் மாணவர் அருண்பாண்டி கோலூன்றித் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல், நிகாஷ் தட்டெறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்றனர். 17 வயதுக்குள்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் மாணவர் மோனிஷ் முதலிடம், குழுப்போட்டியில், 14 வயதுக்குள்பட்டவர்களுக்கான கூடைப்பந்து, 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான கபடி, 17 வயதுக்குள்பட்டவர்களுக்கான தனிநபர் பூப்பந்து போட்டியிலும், இப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.
மாணவர்கள் விமல்ராஜ் தட்டெறிதலிலும், அருண்பாண்டி கோலூன்றித் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் தனிநபர் பட்டம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும், பள்ளித் தாளாளர் ராஜன், தலைவர் ராஜா, துணைத் தலைவர் நல்லையன், செயலர் சிங்காரவேலு, நிர்வாகிகள் ராஜராஜன், ராஜேந்திரன், முதல்வர் சாரதா, பள்ளி முதல்வர் தீபா, கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.