பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.18 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்துக்கு தகுந்தாற்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 14,572 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.98.75-க்கும், குறைந்த பட்சமாக ரூ.91.18-க்கும், சராசரியாக ரூ.97.05-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரத்து 470-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (செப்.12) நடைபெற்ற ஏலத்துக்கு 20, 273 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.98.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.93.57-க்கும், சராசரியாக ரூ.98.05-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.