நாமக்கல் அஞ்சல் கோட்ட அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 24) தொடங்குகிறது.
இது தொடர்பாக நாமக்கல் அஞ்சல் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட தபால் நிலையங்களிலும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, நாமக்கல் தலைமை அஞ்சலகம், பரமத்தி வேலூர் துணை அஞ்சலகம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள குச்சிப்பாளையம் துணை அஞ்சலகம், சங்ககிரி துணை அஞ்சலகம் ஆகியவற்றில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இங்கு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், ஏற்கெனவே எடுக்கப்பட்ட அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளுதல், தொலைபேசி எண், பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் முகவரி சேர்த்தல் உள்ளிட்டவை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. திருத்தம் மற்றும் இதரப் பணிகளுக்கு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு ஆவணம் ஏதும் தேவையில்லை. மற்றவைக்கு உரிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.