தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு கடை வைப்பதற்கு வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகள் விற்பனை செய்திட ஏதுவாக, பண்டிகைக்கு 30 நாள்களுக்கு முன்பாக தற்காலிக உரிமம் வழங்கப்படும். இதற்காக விண்ணப்பங்களை இணைய வழியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும். நிகழாண்டில், தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்திட ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதற்கான கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை தங்களுக்கு குறிப்பிட்ட காலவரையரை தெரியவில்லை என்றும், இணையவழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறும் வணிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில், தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய இயலாத வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று, இணையவழியில் விண்ணப்பம் செய்ய வரும் 28-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதனை பட்டாசு விற்பனையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.