பரமத்தி வேலூர் பகுதிகளில் பொம்மைகள் விற்பனை செய்யும் கடைகளில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி விழா வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்குவதால், பரமத்திவேலூரில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து களிமண் மற்றும் காகிதக் கூழினால் ஆன கொலு பொம்மைகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. திருக்கல்யாணம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ரங்கநாதர், அஷ்டலட்சுமி, குபேரன், அறுபடைவீடு,இசைக் கலைஞர்கள் இசைக்கருவியுடன் உள்ள பொம்மைகள் மற்றும் பல்வேறு சுவாமிகளின் உருவங்கள் கொண்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் காண்பதற்கு கண்ணைக்கவரும் வகையில் உள்ளன. நவராத்திரி விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பரமத்திவேலூரில் வடத்தில் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழாவினையொட்டி கொலு கண்காட்சிகள் அமைப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.