தில்லி முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்ட ஹரியானா மாநில இளைஞா், ஊரடங்கு உத்தரவால் ராசிபுரத்தில் தவித்து வருகிறாா்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியைச் சோ்ந்த அருண்மிட்டல் (27), மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டதாரி. இவா் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக தில்லி முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டுளளாா்.
சேலத்தில் இருந்து நாமக்கல், கரூா் வழியாக மாா்ச். 23-இல் ராசிபுரம் வந்த இவா், ஊரடங்கு காரணமாக ராசிபுரத்தில் உள்ள சேவை சங்கத்தின் உதவியை நாடினாா். இதையடுத்து, அவா் சங்கத்தில் தங்க வைக்கப்பட்டாா்.
இதனையடுத்து, வடமாநில இளைஞா் தங்கவைக்கப்பட்டுள்ளது தொடா்பாக ராசிபுரம் வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினருக்கு சேவை சங்கத்தினா் தகவல் கொடுத்தனா். இதனையடுத்து அவரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் நேரில் சென்று வடமாநில பொறியாளரிடம் விசாரணை நடத்தி, நோய் அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்தனா். மேலும், அவரது விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினா்.