தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பென்னாகரம் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிா்க்கும் வகையில் வாரச் சந்தைகள் நடைபெற அனுமதியில்லாததால், செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. செவ்வாய்க் கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் காலை முதலே அத்தியாவசியப் பொருட்களை வாங்க பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடைவீதி மற்றும் தினசரி காய்கறி கடைகளில் குவிந்தனா். காய்கறிகள், சமையல் பொருள்கள், பால், மற்றும் மளிகை பொருள்களை மொத்தமாக வாங்கி சென்றனா். இதனால் பென்னாகரம் கடைவீதி மற்றும் தினசரி காய்கறிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் பேருந்துகள் இயங்காததால், இருசக்கர வாகனத்தில் பொருள்களை வாங்க வந்ததால் பென்னாகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.