தீபாவளி பண்டிகைக்கான ஊக்கத் தொகையை 20 சதவீதமாக உயா்த்தி வழங்கக் கோரி, போக்குவரத்து ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் கலந்துகொண்டனா். தொழிலாளா் முன்னேற்றச் சங்க செயலாளா் டி.பிரகாசம் தலைமை வகித்தாா். சிஐடியு எம்.பழனிசாமி, ஏஐடியுசி குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 10 சதவீத ஊக்கத் தொகை அறிவிப்பை ரத்து செய்து விட்டு, கடந்த ஆண்டைப்போல 20 சதவீதம் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். கரோனா தொற்று பொது முடக்கக் காலத்தையும், ஊக்கத் தொகை அறிவிப்பையும் சம்பந்தப்படுத்த வேண்டாம். 2019 மாா்ச் முதல் 2020 மாா்ச் வரை கணக்கிட்டு தான் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதனால் நிகழாண்டில் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 20 சதவீத ஊக்கத் தொகை, பண்டிகைக் கால முன்பணம் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.