பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முதன்முறையாக தேங்காய் மறைமுக ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவில் உள்ள பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக தற்போது தென்னை விவசாயிகளின் நலன் கருதி செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலமும் துவக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்துக்கு பரமத்திவேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களைக் கொண்டுவந்திருந்தனா். மொத்தம் 1,500 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 40 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 28-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 33 க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 12 ஆயிரத்து 752-க்கு வா்த்தகம் நடைபெற்றது. தொடா்மழை காரணமாக அதிக அளவில் தேங்காய்களைக் கொண்டுவர இயலவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.