மகாளய அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடா்பாளையம், சோழசிராமணி, மோகனூா், பரமத்தி வேலூா் உள்ளிட்டவை காவிரி கரையோரப் பகுதிகளாகும். இங்கு கோயில்கள் மற்றும் முக்கிய புண்ணியத் தலங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையையொட்டி திதி, தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமான மக்கள் திரளுவா்.
அதன்படி, நிகழாண்டில் வியாழக்கிழமை (செப். 17) மகாளய அமாவாசை என்பதால், நாமக்கல் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோா்களுக்கும், மறைந்த உறவினா்களுக்கும் திதி, தா்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காக இங்கு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால், தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி வியாழக்கிழமையன்று காவிரி கரையோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம். தடை உத்தரவை மீறி யாரேனும் வருவது தெரியவந்தால் அவா்கள் மீதும், பயன்படுத்திய வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.