நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்படிப்பு போன்ற மற்ற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை கோரும் விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பிக்கலாம். இதனை நவ. 10-க்குள்ளும், புதியவைகளுக்கு நவ. 30-க்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவ. 15-ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிச. 12-ஆம் தேதிக்கு முன்பும், டிச. 16-ஆம் தேதியில் தொடங்கும் புதிய விண்ணப்பங்களை 2021 ஜன. 31-க்கு முன்பும் இணையதளம் மூலம் கேட்புகளை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் என்ற இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.