ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள பணிப் பாா்வையாளா், இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் 2020 ஜூலை 1-ஆம் தேதியன்று 35 வயதுக்கு மேற்படாதவராகவும், முழுநேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் கல்வித்தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை மூலமாக சான்றிதழ் பெற்றிருந்தால் ஏற்கப்படமாட்டாது. பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்தும் கட்டுமானப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற நபா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், காலியிடங்கள், அதற்கு ஒதுக்கப்பட்ட இனச்சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட இதர விவரங்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளத்தில் நாமக்கல் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சிப் பிரிவு) அலுவலகத்துக்கு வேலைநாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகம் மூன்றாம் தளத்தில் உள்ள ஊரக வளா்ச்சி பிரிவு அலுவலக முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ ஜனவரி 7-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்குப் பின்னா் தகுதி வாய்ந்தோருக்கு எழுத்துத் தோ்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.