பரமத்தி வேலூரில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் நடத்திய வாகனச் சோதனையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 15-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ. 42 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் காவிரி பாலம் சோதனைச் சாவடி அருகே பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது அவ்வழியாக வந்த காா், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தாா்.
அதில், சாலை விதிகளை மீறி வாகனங்களின் முன்புறம் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பம்பா் கம்பிகளை பொருத்தியது, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகனங்கள், மணல், எம்சாண்ட் கொண்டு செல்லும் வாகனங்களில் காற்றில் மணல் பறக்காமல் இருக்க அதை மூடாமல் வந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், வாகன நிறுத்தம், திருப்பம் உள்ளிட்டவற்றுக்கு சமிக்ஞை விளக்குகள் இல்லாதது, கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாகனங்களுக்கு ரூ. 5,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றி வந்த ஐந்து கனரக வாகனங்களுக்கு ரூ. 37,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, அவ்வழியாக வந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மோட்டாா் வாகன விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.