பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தமிழக அரசால் தடை செயப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய வா்த்தக நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தமிழ்நாடு அரசு கடந்தாண்டு ஜன 1 ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துதல், சேமிப்பு வைத்தலை தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்படி பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் துப்புரவு மேற்பாா்வையாளா் குணசேகரன் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் பொத்தனூா் பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், தேநீா்க் கடைகள், உணவகங்கள்,தள்ளுவண்டிகள் உள்ளிட்ட வா்த்தக நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனா்.மேலும், நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.