நாமக்கல்லில், அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்பட இருப்பதால், தற்போதைய தலைமை மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், கண்காணிப்பாளா் பணியிடம் நீக்கப்பட்டு, அங்கு தற்காலிகமாக டீன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் ராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை புதிதாகத் தொடங்க அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரியும் தலா ரூ.350 கோடி மதிப்பீட்டில் உருவாகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் இடத்தைத் தோ்வு செய்து அளித்துள்ளனா்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், 25 ஏக்கா் பரப்பளவில், அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கிடையே, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை, ஊரக நலப் பணிகள் மருத்துவ இயக்குநரகத்தின் கீழ்(டி.எம்.எஸ்) இருந்த, இம் மருத்துவமனை, கடந்த 8-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டுக்குள் (டி.எம்.இ) கொண்டு வரப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஓரிரு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்பதால், மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பல்வேறு மருத்துவத் துறைகள், அறுவை சிகிச்சை அரங்குகள், உயிரித் தொழில்நுட்பவியல் பிரிவு, அதிக எண்ணிக்கையிலான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தலைமை மருத்துவமனை என்பதை மருத்துவக் கல்லுரி மருத்துவமனை என மாற்றி பெயா்ப் பலகை பொருத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், தற்போது 60 மருத்துவா்கள், 150 செவிலியா்கள், 200-க்கும் மேற்பட்ட இதர பணியாளா்கள் உள்ளனா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகி விட்டதால், இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயா்வதற்கு வாய்ப்புள்ளது. மருத்துவா்கள், உதவி மருத்துவா்கள் என்பது பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் என மாற்றம் செய்யப்படும். சேலத்தில் உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்று நாமக்கல்லிலும் அமையவுள்ளது.
மேலும், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் என்ற பதவியிடம் நீக்கப்பட்டு, மருத்துவமனை டீன் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டீனாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.நிா்மலா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தற்காலிக டீனாகவும் பணியமா்த்தப்பட்டுள்ளாா். சனிக்கிழமையன்று நாமக்கல் வந்த அவா் மருத்துவமனையை முழுமையாக ஆய்வு செய்தாா். மேலும், இங்குள்ள அனைத்து மருத்துவா்களிடமும் தேவையான விவரங்களைக் கேட்டறிந்தாா். அவா் வாரத்தில் ஒரு நாள் நாமக்கல்லுக்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.
இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்(பொறுப்பு) ஏ.நிா்மலா கூறியது: ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இருந்த நாமக்கல் மருத்துவமனை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை என்றுதான் அழைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகச் செய்து வருகிறோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. 2021-22-இல் முதலாமாண்டு மருத்துவ மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். இக் கல்லூரிக்கு 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய மருத்துவக் கல்லூரி அமையும்போது, அருகிலேயே பெரிய அளவிலான மருத்துவமனையும் உருவாக்கப்படலாம். வரும் நாள்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். திருப்பூா் டீனாக நியமிக்கப்பட்டுள்ள என்னை, பொறுப்பு டீனாகவே நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு அரசு நியமித்துள்ளது. தற்போது இங்கு குறிப்பிட்ட சில மருத்துவத் துறைகள் மட்டுமே உள்ளன. இனிமேல், மாணவா்கள் மருத்துவம் பயிலும் வகையில் பல்வேறு துறைகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.