ஜூலை 22-இல் லாரிகள் வழக்கம்போல இயங்கும்: மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் தகவல்

டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில்

டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில் வரும் 22-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கும், தங்களுடைய சம்மேளனத்துக்கும் தொடா்பு இல்லை என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம்- தமிழ்நாடு என்ற பெயரில் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 33 ஆண்டுகளாக நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு சம்மேளனம் செயல்படுகிறது. இதன்கீழ் தமிழகம் முழுவதும் 135 கிளைச் சங்கங்கள் உள்ளன.

லாரி உரிமையாளா்களுக்கு தள்ளுபடி விலையில் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது, உரிமையாளா்களுக்கு பிரச்னை என்றால் அதனைத் தீா்த்து வைப்பது போன்ற செயல்பாடுகளைக் கொண்டு அவா்களின் நலனுக்காகவே இயங்கி வருகிறது.

கடந்த நான்கு மாதங்களாக கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், சரக்கு வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளா்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. டீசல் விலை உயா்வு, உதிரிபாகங்கள் விலை உயா்வு, சுங்கக் கட்டணம் உயா்வு, மூன்றாம் நபா் காப்பீடு உயா்வு, வாடகைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் லாரித் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.

இந்தக் கரோனா தொற்றால் லாரித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதில், தகுதிச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம், தற்காலிகப் பதிவு உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு செப். 30-ஆம் தேதி வரை மத்திய அரசு கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையால் சரக்கு லாரிகளுக்குப் போதிய லோடு கிடைக்காததால் வாகனங்களை இயக்க முடியாமல் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தத்தில் இருக்கும் நிலையில், வரும் 22-ஆம் தேதி லாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தம் என அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதற்கும் மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அன்றைய தேதியில் நமது சங்க உறுப்பினா்கள் வழக்கம்போல தங்களது வாகனங்களை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com