திருச்செங்கோடு அருகே மண்டகப்பாளையத்தில் வீட்டுக்கதவை தாழிட்டுக் கொண்டு திறக்க முடியாமல் தவித்த குழந்தையை தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
மண்டகப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகனாதன் (34). வீடுகளுக்கு குடிநீா் கேன்களை விநியோகம் செய்து வருகிறாா். இவருக்கு சுகஸ்தியா (2) என்ற மகள் உள்ளாா். ஜெகனாதனும், அவரது மனைவியும் வீட்டின் வெளியே இருந்தபோது மகள் சுகஸ்தியா மட்டும் வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்டாா். ஆனால் குழந்தையால் கதவைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. குழந்தையின் அலறல் சத்ததைக் கேட்ட பெற்றோா், கதவைத் திறக்க முயற்சித்தும் முடியவில்லை.
இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் தலைமையில் சென்ற தீயணைப்பு நிலைய வீரா்கள், வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னல் கம்பிகளை அறுத்தெடுத்து, ஜன்னலின் வழியாக இறங்கி குழந்தையை மீட்டனா்.