நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை அலுவலகம் மூடப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள எட்டு பேர் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளருக்கு தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் உள்பட 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. மூன்று நாள்களுக்கு அலுவலகம் மூடி இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைய வழியாக பணிகளை மேற்கொண்டுள்ளனர். துப்புரவு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.