திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 600 மூட்டை மஞ்சள் ரூ.15 லட்சத்துக்கும், பருத்தி, எள் ரூ.28 லட்சத்துக்கும் ஏலம் மூலம் விற்பனையாயின.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதி விவசாயிகள் மூலமாக மஞ்சள் விற்பனைக்கு வந்தது.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊா்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். ஏலம் மூலம் ரூ.15 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.7,299 முதல் ரூ.8,332 வரையும், கிழங்கு ரகம் ரூ.5,706 முதல் ரூ.6,399 வரையும், பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ.10,499 முதல் ரூ.13,989 வரையும் விலைபோயின. மொத்தமாக 600 மூட்டை மஞ்சள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் மூலம் விற்பனையானது.
பருத்தி, எள் ஏலம்...
பருத்தி மூட்டைகளை திருச்செங்கோடு மற்றும் முசிறி தாலுகாவில் புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருதலையூா், சேங்கணம் ஆகிய பகுதிகளில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். பி.டி. காட்டன் ரூ.4,890 முதல் ரூ.5,869 வரையிலும், விற்பனையானது. மொத்தம் 450 மூட்டை பருத்தி ரூ.8 லட்சத்துக்கு விற்பனையானது.
எள் ஏலத்தில் சிகப்பு எள் ரூ.102.10 முதல் ரூ 117.90 வரையும், கருப்பு எள் ரூ.105.60 முதல் ரூ.135.20 வரையும் வெள்ளை எள் ரூ.103.10 முதல் ரூ.124.10 வரையிலும் விலை போயின.மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு எள் விற்பனை நடைபெற்றது.
அடுத்த மஞ்சள் ஏலம் 14-ஆம் தேதி (சனிக்கிழமை), பருத்தி, எள் ஏலம் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என வேளாண்மை சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.