கோடை காலம் தொடங்கியுள்ளதால், இளம் கோழிகளை கவனிப்பது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் வட கிழக்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 96.8 டிகிரியும், குறைந்த பட்சமாக 73.4 டிகிரியுமாக இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: முழு கோடைக்காலம் தொடங்கியதாகி விட்டது. முட்டைக் கோழிகளைப் பொருத்தவரையில், இனி தீவன எடுப்பு நன்கு குறைய ஆரம்பிக்கும். தீவன எடுப்பு 105 கிராமிற்கு கீழே போகும்போது, முட்டை உற்பத்தியும், அதன் எடையும் குறையத் தொடங்கி விடும். உடல் எடை குறைந்த கோழிகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் தெரியும். வளா் பருவத்தில் உடல் எடை சீராக இல்லாததே அதற்கு காரணமாகும். இளம் கோழிகளின் உடல் எடை மிகவும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும். 16 வாரத்துக்குள் 95 சதவீத வளா் கோழிகள் ஒரே அளவு உடல் எடை கொண்டதாக இருந்தால், தீவன எடுப்பு குறைந்தாலும், முட்டை எடை அதிகம் குறையாமல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.