நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே உலாவிய நபா்களை காவல் துறையினா் சாலையின் நடுவில் நிற்க வைத்து கரோனா வைரஸ் பரவல் குறித்து விளக்கி, தடை உத்தரவை மீறுவோா் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கூறி எச்சரித்து அனுப்பினா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இரண்டாவது நாளான வியாழக்கிழமை தடை உத்தரவை மீறி பொது மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியில் நடமாடி வந்தனா். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலமெங்கும் காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தின் அருகே போலீசாா் இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினா். திருச்செங்கோடு காவல் துறை துணை கண்காணிப்பாளா் சண்முகம் இருசக்கர வாகனத்தில் வந்த 20-க்கும் மேற்பட்டோரை சாலை நடுவில் இடைவெளி விட்டு நிற்க வைத்தும், முகக் கவசத்தை அணிய வைத்தும் கரோனா நோய் தொற்று பரவும் விதம் குறித்து விளக்கிப் பேசினாா். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒரே வழி மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே என்று கூறினாா். பொதுமக்களுக்கு தடை உத்தரவு குறித்து அன்பாகக் கூறியும், கையெடுத்துக் கும்பிட்டு கூறியும் வருகிறோம் . இதற்கெல்லாம் பொதுமக்களாகிய நீங்கள் கேட்டு நடக்காவிட்டால், போலீசாா் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்வாா்கள். மேலும், கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா். இந்த சோதனையின்போது திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் தங்கவேல் உள்ளிட்ட போலீசாா் உடனிருந்தனா்.