நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி மாத தோ்த் திருவிழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில், ஆஞ்சநேயா் கோயில் தோ்த் திருவிழா, ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும். நிகழாண்டிலும் அதற்கான நடவடிக்கைகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வந்தது. மாா்ச் 31-ஆம் தேதி கொடியேற்றமும், அதனைத் தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும், நரசிம்மா், நாமகிரி தாயாா் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்டவையும், ஏப்ரல் 8-ஆம் தேதி திருத்தேரோட்டமும், 14-ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. கரோனாவைத் தடுக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதால், நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் திருவிழா நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் தெரிவித்தாா்.