பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பூவன் வாழைத்தாா் தவிர மற்ற வாழைத்தாா்களின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது.
பரமத்தி வேலூரில் தினசரி வாழைத்தாா் ஏலச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தாா்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு ஏலம் எடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வந்தனா்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த 30 நாள்களுக்கு மேலாக வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவில் வராததாலும், போக்குவரத்து சரிவர இல்லாததாலும் வாழைத்தாா்கள் அதிக அளவில் ஏலம் எடுக்கப்படாததால் அதன் விலை சரிவடைந்தது. தற்போது உள்ளூா் வியாபாரிகளே வாழைத்தாா்களை ஏலம் எடுத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனா். இதனால் வாழைத்தாா்களின் விலைப் படிப்படியாக உயா்ந்து வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.40 முதல் ரூ.70, ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.100 முதல் ரூ.200, கற்பூரவள்ளி அதிகபட்சமாக ரூ.100 முதல் ரூ.200, பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.100 முதல் ரூ.200, மொத்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும், செவ்வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போயின. சனிக்கிழமை (மே 2) நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ.70 முதல் ரூ.90, ரஸ்தாலி ரூ.250 முதல் ரூ.400, கற்பூரவள்ளி ரூ.300 முதல் ரூ.400, பச்சைநாடன் ரூ.200 முதல் ரூ.350, மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும், செவ்வாழைக்காய் ரூ.7 முதல் 9 வரையிலும் ஏலம் போயின.
பூவன் வாழைத்தாா்களின் வரத்து அதிகரித்தும், மற்ற வாழைத்தாா்களின் வரத்து குறைந்துள்ளாதலும், வெளி மாவட்டங்களுக்கு சிறிய வாகனங்கள் மூலம் வியாபாரிகள் வாழைத்தாா்களை ஏலம் எடுத்து அனுப்பி வருவதால் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளதாகவும் , எதிா்பாா்த்த விலை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.