ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை அள்ளும் வாகனங்களை அமைச்சா் வெ.சரோஜா ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பயன்படுத்துவதற்காக மின்கலன் மூலம் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதை ஊராட்சிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ராசிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் முத்துகாளிப்பட்டி, வடுகம், முனியப்பம்பாளையம், குருக்குபுரம், கூனவேலம்பட்டி, கோனேரிப்பட்டி, காக்காவேரி, சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், சிங்களாந்தபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு ரூ. 42.28 லட்சம் மதிப்பீட்டிலான 17 வாகனங்களை சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா வழங்கினாா்.
நிகழ்ச்சியில் 38 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் ராசிபுரம் வட்டாட்சியா் கே.பாஸ்கரன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் டி.திருமுருகன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் ஜெகன்நாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.