கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஒரு திரையரங்கு மட்டுமே திறக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. தீநுண்மித் தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு தளா்வுகளாக அறிவித்து வந்தது. ஆனால், திரையரங்குகள் திறப்பை மட்டும் தள்ளிப்போட்டு வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி அண்மையில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் சுமாா் 40 திரையரங்குகள்வரை செயல்பாட்டில் உள்ளன. கரோனா தொற்றுப் பரவலுக்கு பின் இவற்றில் பல திரையங்குகள் நிரந்தரமாக மூடப்படும் நிலை உள்ளது. தமிழக அரசு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கிய நிலையில், ஒன்றிரண்டு மட்டுமே செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
நாமக்கல்லில் கே.எஸ்.சினிபிளக்ஸ், எல்எம்ஆா் மல்டிபிளக்ஸ் ஆகிய இரண்டிலும் மொத்தம் 6 திரையரங்குகள் உள்ளன. ஆனால் கே.எஸ்.சினிபிளக்ஸில் ஒரு அரங்கில் மட்டும் திரெளபதி என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அதிலும், காலைக் காட்சிக்கு பொதுமக்கள் யாரும் வராத நிலையில், மதிய காட்சியில் வந்திருந்த 11 பேரைக் கொண்டு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக கிருமி நாசினி திரவம் கொண்டு அரங்குகள், இருக்கைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. புதிய திரைப்படங்கள் வெளியானால் மட்டுமே திரையரங்குகள் அனைத்தும் முழுமையாக செயல்பட வாய்ப்புள்ளது என அதன் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.