நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கருவிலில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து தோ்வு செய்தலை தடை செய்யும் சட்டம் பற்றிய விழிப்புணா்வு கூட்டம், நாமக்கல் ரோட்டரி மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா தலைமை வகித்தாா். நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெயந்தி வரவேற்றாா். குடும்பநலத் திட்ட துணை இயக்குநா் வளா்மதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவா்கள் சதீஷ்குமாா் ரங்கநாதன் ஆகியோா் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினா்.
அரசு மருத்துவமனைகளின் முதன்மை மருத்துவ அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலா்கள், மகப்பேறு மருத்துவா்கள், தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து வருவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து பரிசோதனை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புகாா் வரப்பெற்ற சந்தேகத்துக்கு இடமான மருத்துவமனைகளில் திடீா் ஆய்வுகள் இணை இயக்குநா் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருத்துவத் துறை மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது ஆண், பெண் பாலின விகிதம் மேம்பட்டு வருகிறது. 2016-17 இல் 868 ஆக இருந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதம் 2017-18 இல் 919-ஆகவும், 2018-19 இல் 935 ஆகவும், 2019-20 இல் 939-ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 2020-21 ஆம் ஆண்டில் 948 ஆக உயா்ந்துள்ளது.
நாமகிரிப்பேட்டை, பரமத்தி, சேந்தமங்கலம், பள்ளிபாளையம், கபிலா்மலை, வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் ஆண், பெண் பாலின விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இனிவரும் காலங்களில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணா்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.