பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்போனது.
பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி விவசாயிகள், வியாழக்கிழமைதோறும் பரமத்தி அருகே வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்குக் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வார வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6,924 கிலோ கொப்பரைத் தேங்காய்க் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 120.21 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 113.99 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 118.11 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்து 649-க்கு வா்த்தகம் நடைபெற்றது. நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 8,686 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 121.95 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 111.11 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 120.49 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது.