நாமக்கல்லில் பூட்டிருந்த வீட்டில் ரூ.20 லட்சம் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகர் ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூவில் வசித்து வருபவர் பொற்கோ(45). புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் நாமக்கல்லில் டயர் கடை நடத்தி வருகிறார். இங்கேயே சொந்தமாக வீடுகட்டி வசிக்கிறார். இந்த நிலையில் இறந்து போன தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக மனைவி, இரு மகள்களுடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
இன்று அதிகாலை வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் பின் நாமக்கல் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்தார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.